tamilnadu

img

சாதிக்கு எதிரான போராட்டத்தை குடும்பத்திலிருந்து தொடங்குவோம்! -இயக்குநர் ராஜு முருகன் நேர்காணல்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாடு ஆகஸ்ட் 15 அன்று தஞ்சாவூரில் துவங்குகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் “சாதியம் தகர்ப்போம், மனிதம் காப்போம்” என்ற முழக்கத்துடன் தமிழ்ச் சமூகத்துடன் ஒரு பரந்த உரையாடலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் அளித்த நேர்காணல் இது.

இந்தியா சுதந்திரமடைந்து கடந்த 70 ஆண்டுகளில் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றங்களை நாடு அடைந்திருக்கி றது. ஆனால், சாதிக்கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்கிறது. தீண்டாமைக் கொடுமைகள் முன்பைக் காட்டிலும் அதிகரித்துவருகின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுதந்திரத்துக்குப் பிறகு, குறிப்பாக 1990-களில் வந்த உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா இன்னொரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மொபைல் போன், சமூகவலைதளங்கள் போன்ற தகவல்தொடர்புகள் எல்லா மக்களுக்கும் போய்ச்சேரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது சாதி, தீண்டாமை போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படக் கூடிய சூழலை நாம் எட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ஒரு தீவிரமான பிரச்சனையாக சாதியும், தீண்டாமைக்கொடுமைகளும் உள்ளன. அப்படியென்றால், ஒரு விஷயத்தைத்தான் இங்கு பார்க்கிறேன். அடிப்படையில் அறம் சார்ந்த ஒரு சமூகமாற்றம் என்பதை இத்தனை ஆண்டுக் காலத்தில், இங்கு தொடர்ந்து ஆட்சிசெய்வதுவருகிற கட்சிகள், அரசியல் ரீதியாக ஏற்படுத்தவே இல்லை.  நம் சமூகத்தில் அறம் சார்ந்த மாற்றத்தை நிகழ்த்தாமல், நாம் நினைக்கிற எந்த மாற்றமும் ஏற்படாது. ஓட்டுக்காக சாதியையும், மதத்தையும் பிரிவினையையும் தீவிரமாக விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு சாதியப் பாகுபாடு, தீண்டாமை என்பது தீவிரமடைந்துள்ளது. சமூகவலைதளங்களில் இருக்கக்கூடிய வன்மம் என்பது ஒரு அடையாள அரசியலை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. அனைவர் மீதும் சாதி திணிக்கப்படுகிறது. சமூகநீதிக் காகப் பேசக்கூடியவர்கள் மீதும், அறம் சார்ந்து இயங்கக் கூடியவர்கள் மீதும், ‘இவர் என்ன சாதி?’ என்கிற கேள்வியை எழுப்பக்கூடிய மோசமான சூழல், சமூகவலைதளங்களில் இருக்கிறது.

சாதியை முழுவதுமாக நீக்கிவிட்டு, சாதி அற்றவர்களாக இருப்பதுதான் முக்கியம். சாதி எந்த அடையாளத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அது பிராமணிய அடையாளமாக இருந்தாலும் சரி, தலித்திய அடையாளமாக இருந்தாலும் சரி. ‘சாதியற்ற சமத்துவத்தை நோக்கிப் போவதுதான் நம்முடைய இலக்கு’ என்று அம்பேத்கர் சொல்கிறார். அதுதான் மிகவும் முக்கியம். ஆனால், இன்றைக்கு அடையாள அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதனால், இந்த சுதந்திர தினத்துக்கு நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியானது, தீண்டாமையை முழுவதுமாக அகற்றுவோம் என்பதுடன், நம் மீது தீண்டாமையை சுமத்தக்கூடிய அரசியல் கட்சி களையும் சேர்த்து அகற்றுவோம் என்பதற்கான உறுதிமொழி யையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

தீண்டாமை ஒழிப்பு முக்கியமானதா, அல்லது சாதி ஒழிப்பு முக்கியமானதா? ஏனென்றால், சாதி ஒழிப்பு என்பது முக்கியமான விஷயமாக விவாதிக்கப்படு கிறது?

“சாதி ஒழிப்பு இல்லாமல் தீண்டாமை ஒழிப்பு சாத்திய மாகாது.இதைத்தான் அம்பேத்கர், பெரியார் உட்பட எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பை நீக்கிவிட்டு நீங்கள் தீண்டாமை குறித்து பேசவே முடியாது.தீண்டாமை ஒழிப்பு நிச்சயமாக சாதி ஒழிப்பிற்கான ஒரு களநடவடிக்கை.நம் குடும்ப அமைப்புகளில் தீவிரமாக ஊடுருவியிருக்கக்கூடிய சாதியை அகற்றுவதுதான் நம் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்குள்ள அரசியலைக்கூட விட்டுவிடுவோம். எல்லா கிராமங்களிலும் போய் பார்த்தால் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பழக்க வழக்கங்களில், கலாச்சாரங்களில், பண்பாட்டுத் தளங்களில் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்கள் இருவருமே வறுமையில் சமமாக இருப்பவர்கள். ஆனால் இவர்கள்தான், இன்றைக்கு சாதிய வன்மத்தில் அடித்துக்கொண்டு உயிரை இழக்கிறார்கள், சொத்துக்களை இழக்கிறார்கள். விவசாயம் நலிந்துவிட்ட இந்தக் காலத்தில் நகரங்களை நோக்கி எல்லோரும் போகிறார்கள். உதாரணமாக, திருப்பூரில் ஒரு தொழிற்சாலையில் போய் பார்த்தால் ஒரு தலித் மேனேஜராகவோ, சூப்பர்வைசராகவோ இருப்பார். அவருக்குக் கீழே பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஒரு தொழிலாளியாக இருப்பார்.

அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் ஒரே மாதிரி யாக உள்ளன. குலசாமி என்று எடுத்துக்கொண்டால், மாரியம்மாவோ, கருப்பசாமியோ, முனியாண்டியோ இருப்பார்கள். அவர்களின் படையலில்கூட எந்த வித்தியாச மும் இருக்காது. எனவே, அடிப்படையில் இவர்கள் அனைவருமே ஒரே நிலத்தின் பிள்ளைகள். இவர்கள் ஏன் அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் இவர்களுக்குள் சாதி என்பது பெருமைக்குரிய ஓர் அடை யாளமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அதை விதைத்தது வர்ணாசிரமம். அது குறித்து நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், அதைத்தாண்டி அடுத்தகட்டத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்பனியத்தையும், பார்ப்ப னர்களையும் விமர்சிப்பது மட்டுமே இன்றைக்குத் தீர்வாக இருக்காது. ஏனெனில் அவர்களின் இடத்துக்கு இன்றைக்கு ஆதிக்க சாதிகள் வந்துவிட்டன. எனவே, ஆதிக்க சாதியினர் மனதில் இருக்கக்கூடிய சாதிப்பெருமை என்கிற உணர்வை அடித்துநொறுக்காமல், சாதியை ஒழிக்க முடியாது. இதை அறம் சார்ந்த கல்வி முறையில் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.”

சமீபத்தில், பத்து நாள்களில் ஐந்து ஆணவக்கொலை கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன..?

“ஆணவக்கொலையில் சம்பந்தப்பட்ட சில குடும்பத்தி னரிடம் நான் பேசியிருக்கிறேன். தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகளையே கொலை செய்கிறார்கள். எப்படி இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று பார்த்தால், அக்கம் பக்கத்தினர் நம்மை கேவலமாகப் பேசுவார்கள், சொந்தக்காரர்கள் நம்மை மோசமாகப் பேசுவார்கள் என்பதுதான் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கி றது. வேறு சாதியைச் சேர்ந்த ஒரு ஆணை தன் மகள் காதலித்து மணந்துகொண்டாள் என்றால், சரி நடந்து விட்டது என்று சமாதானமாகி இருப்பவர்கள் பலர் உண்டு. அப்படி இருப்பவர்களின் உறவினர்கள், தெருக்காரர்கள், சாதிக்காரர்கள் எனப் பலரும், ‘இப்படி உன் பிள்ளையைக் கொடுத்துவிட்டாயே… உன் பிள்ளை செய்ததைப் பார்த்தாயே.. இப்படி அமைதியாக இருக்கிறாயே’ என்றெல் லாம் உசுப்பேத்துவார்கள். இதுதான் பெரும்பாலான ஆண வக்கொலைகளுக்குக் காரணம்.

ஆணவக்கொலையைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஆனால், அரசு அதைக் கண்டுகொள்ளா மல் இருக்கிறது…

“நிச்சயமாக தனிச்சட்டம் வேண்டும். ஆனால், அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பது கசப்பான உண்மை. அதற்குக் காரணம் இங்கு ஆண்டுகொண்டிருக்கிற கட்சிகள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இங்கு உள்ளது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தப்படுவது மிகவும் குறை வாகவே இருக்கிறது. அதை அரசுதான் தீவிரமாக செய்ய வேண்டும்.

நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இப்போது நகரத்தில் வசிக்கிறீர்கள். கிராமங்களில் உள்ள சாதியப் பாகுபாடுகளுக்கும், சென்னை போன்ற பெரு நகரத்தில் சாதியப் பாகுபாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?

நான் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சாணிப்பால் சவுக்கடிக்கு எதிரான போராட்டத்திலிருந்து இடதுசாரிகளின் செயல்பாடுகள்தான் சாதியக் கொடுமைகளில், மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஓரளவுக்கு சாதி துடைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இன்றைக்கும்கூட தலித் குடியிருப்புகள் தனியா கத்தான் உள்ளன. அவர்களுக்கு தனிச்சுடுகாடு. இதை உடைக்க முடியவில்லை. இதுதான் கிராமங்களின் சாபம். இதை உடைத்து ஊரை ஒன்றாக்காமல் கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்கவே முடியாது. நகரங்களில் எல்லோருமே ஒன்றாகக் கலந்து வாழ்கி றார்கள். ஆனாலும், மனதளவில் சாதியப் பாகுபாடுகள் உள்ளன. மற்றவர் என்ன சாதி என்று தெரிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. அதே நேரத்தில், சாதியை உடைத்து வெளியே வருவதற்கான முயற்சியைப் பலரும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பகுதியினருக்கு சாதி யப்பற்று இருக்கிறது. திரைப்படத்துறை உட்பட எல்லா தொழில்களிலுமே அது எப்போதுமே வெளியில் தெரியும்.  ‘அவன் நம்ம ஆளு’ என்று சொல்வதை சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். நகரங்களில் நவீனத் தீண்டாமை தொடர்கிறது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். சாதி எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள், சாதிக்கு எதிரான போராட்டத்தை முதலில் எல்லோரும் வீட்டி லிருந்து ஆரம்பிக்க வேண்டும். நம் அம்மா அப்பா, நம் சகோதர, சகோதரிகள், நம் தாத்தா பாட்டி என எல்லோரும் சாதி பார்க்கிறார்கள் என்றால், அவர்களிடம் சாதி குறித்து பேசாமல், அவர்களைக் கேள்வி கேட்காமல் பூசிமெழுகும் சூழல் இருக்கிறது. அதை நாம் கேள்வி கேட்காததால்தான் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. எனவே, சாதிக்கு எதிரான போராட்டத்தை குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண் டும். அதன் பிறகுதான் தெருவில் இறங்க வேண்டும்.

தமிழ்த் திரைப்படங்களில் சாதிப் பிரச்சனை  எப்படியாகப் பிரதிபலிக்கிறது?

கேரளாவில் ‘பியூப்பிள்ஸ் ஆர்ட் கிளப்’ என்கிற ஓர் இயக்கம் இருக்கிறது. அதன் முதல் படம் ‘நீலக்குயில்’. 1960-களில் வெளியான அந்தப் படம் சாதிப் பிரச்சனையைப் பேசியது. தீண்டாமையைப் பேசக்கூடிய படமாக இருந்தது. கேரளா வில் இன்றுவரை இடதுசாரிப் பார்வை கொண்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சத்யன் என்கிற ஒரு நடிகர், தோழராகவே படங்களில் நடித்து, தோழராகவே அறியப்பட்டவர். அவர் ஒரு பெரிய நடிகரும்கூட. காம்ரேட் ஆக நடிப்பதை துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்றைய தலை முறையினரும் பெருமையாக நினைக்கிறார்கள்.  தமிழ்ப்படங்களிலும் சாதிக்கு எதிரான குரல் நிச்சயமாக ஒலிக்கிறது. ஒரு பழைய திரைப்படத்தில் கோவிலில் மக்களைத் திரட்டிவைத்துக்கொண்டு கோவிலுக்கு முன்பாக நின்றுகொண்டு கோவில் நுழைவுப்போராட்டம் குறித்து ஒரு பெரிய பாடலையே விஜயகாந்த் பாடுவார். தீண்டாமைக்கு எதிரான பாடல் அது. 1980-களில் வெளிவந்த இராம.நாராய ணனின் சிவப்பு மல்லி முக்கியமான படம். அதேநேரத்தில் சாதி பெருமை குறித்துப் பேசக்கூடிய நிறையப் படங்கள் வந்தன. அவை, பண்ணையார் என்கிற கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு பேசும் படங்களாக இருந்தன. பண்ணையார் என்பது சாதியின் அடையாளம்தான். நிலவு டைமைதான் சாதியைத் தூக்கிப்பிடித்தது. பண்ணையாரின் மகளை ஓர் ஏழை இளைஞன் காதலித்து கல்யாணம் செய்துகொள்வான். அதுபோன்ற படங்கள் மறைமுகமாக சாதியைத்தான் குறிப்பிட்டன. இப்போது ஒரு தீவிரமான சினிமா உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிய படைப்பாளிகள் வந்துகொண்டி ருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன், பா.இரஞ்சித் போன்றவர்கள் ஒரு பிரச்சாரமாக இல்லாமல் கலை வடிவில் சாதிப்பிரச்சனைகளைக் கொண்டுவந்திருக்கி றார்கள். அதே நேரத்தில் சாதிப்பெருமை பேசக்கூடிய படங்களுக்கு எப்போதுமே ஒரு வியாபாரம் இருப்பதாக இன்றைக்கும் நம்பப்படுகிறது. அதனால்தான், அப்படிப்பட்ட படங்கள் வருகின்றன. தேவர் மகன், சின்ன கவுண்டர் எல்லாம் வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள். சாதிக்கு ஆதரவான படங்களும் வருகின்றன, சாதிக்கு  எதிரான படங்களும் வருகின்றன. சாதிக்கு எதிராகப் பேசக்கூடிய படங்கள் இன்னும் பத்தாண்டுகளில் அதிகமாக வரும் என்று நம்புகிறேன். வெப்சீரிஸ், டெலிபிலிம் என்ற வடிவங்களில் அதிகமாக வரும்.”

சமூகநீதி பேசி ஆட்சிக்கு வந்த கட்சிகள், ஆணவக் கொலைகள் குறித்து ஓர் அறிக்கை வெளியிடக்கூட தயாராக இல்லையே…

கேரளாவில் இடதுசாரிகளின் பின்புலத்தில் சினிமா துறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதேபோல, தமிழ்ச்சூழ லில் திராவிட இயக்கப் பின்புலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் திராவிட இயக்க அரசியலை சினிமாவில் பேசினார்கள்.ஆனால் அவர்களின் அரசுகள் சாதியத்தை போதுமான அளவிற்கு உடைக்கவில்லை. இவ்வாறு நான் தொடர்ந்து பேசிவருகிறேன். அதற்கான எதிர்வினைகளையும் சந்தித்துவருகிறேன். ஆனாலும், அதை நாம் பேசியே ஆக வேண்டும். அவர்கள் நம் சகோத ரர்கள்தான். கலைஞரே நான் ஒரு கம்யூனிஸ்ட் என்றுதான் கூறியிருக்கிறார். இடதுசாரிகளின் தாக்கம் இல்லாமல் எந்த விஷயமும் இந்த நூற்றாண்டில் வரவில்லை. பெரியார் உட்பட எல்லோருமே இடதுசாரி இயக்கத்திலிருந்து பல விஷ யங்களை இந்த மண்ணுக்கு மாற்றியிருக்கிறார்கள். 

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீங்கள். வெண் மணிக் கொடுமையின் தாக்கம் உங்களுக்குள் எந்த ளவுக்கு இருக்கிறது?

வெண்மணி கொடுமை சிறுவயதிலேயே என்னைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இடதுசாரி அமைப்புக்குள் நான் வருவதற்குக் காரணமே வெண்மணிக் கொடுமை தான். தோழர் சோலை சுந்தரப்பெருமாள் எழுதிய செந்நெல் என்கிற நாவலை வாசித்தேன். அது, எனக்குள் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. என்னுடைய சொந்த கிராமம், வெண்மணிக்கு அருகில்தான் இருக்கிறது. நம்முடைய பக்கத்தில் ஊரில் இவ்வளவு பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறதே என்பது எனக்குள் மிகப்பெரிய அவமான உணர்வை ஏற்படுத்தியது.”

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல் பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு தொடர்ந்து நிகழ்த்தப்படுகிற சாதிய ரீதியான கொடுமைகளில் சிலரால் பாகுபாடு பார்க்கப்படுகிறது. டி.ஒய்.எப்.ஐ தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டபோது, சிலர் அதைக் கண்டித்து குரல் கொடுக்கவில்லை. ஆணவ கொலைகள் நடக்கும்போது வழக்கமாக எழும் குரல், அசோக் படுகொலையின்போது கொஞ்சம் குறைவாகத்தான் ஒலித்தது. ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அப்படி எந்தவொரு பாகுபாட்டையும் பார்க்காமல், உடனடியாக களத்தில் இறங்கும் போராடுகிற முக்கியப் பணியை செய்து வருகிறது. இடதுசாரி கட்சிகளுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை என்கிற விமர்சனத்தை ஒரு சாரார் பொதுவாக வைத்துவருகிறார்கள். ஆனால், இடதுசாரி இயக்கங்கள் தான் ஆரம்பத்திலிருந்து வர்க்க விடுதலை என்பது சாதி விடுதலையுடன் பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்ற பார்வையுடன் செயல்பட்டுவருகின்றன. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மிகப்பெரிய பணியைச் செய்துகொண்டிருக்கிறது. அதற்கு என் உளப்பூர்வமான வாழ்த்துகள்.”

சந்திப்பு: மு.கந்தசாமி,பீமன்